
INTRO :
வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சின் என தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பல காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ #வரலாற்றில் முதன்முறையாக
தண்டவாளம் இன்றி வீதி வழியாக
பயணிக்கவுள்ள புகையிரத எஞ்சின்!
இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி வழியாக கண்டியிலிருந்து பேராதனை நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளது.
அண்மையில் வீசிய ‘டிட்வா’ புயல் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையின் கடுகண்ணாவ மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இடையே புகையிரதங்களை இயக்க முடிந்தாலும், அதற்கு அப்பால் உள்ள சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அங்கு வேறு புகையிரத எஞ்சின்கள் இல்லை.
பேராதனை ‘களுபாலம்’ பகுதியின் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், கண்டியிலிருந்து பேராதனை வரையிலான புகையிரதப் பாதை தற்போதும் மூடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே, மாற்று வழியின்றி பிரதான நெடுஞ்சாலை வழியாக புகையிரத எஞ்சினைக் கொண்டு செல்ல புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையின் மூலம், இலங்கையின் பொது வீதி ஒன்றில் உள்ள பாலம் ஒன்றின் வழியாகவும், நாட்டின் மிக நீளமான “மகாவலி கங்கை” (Mahaweli River) ஆற்றைக் கடந்து செல்லும் முதலாவது புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த M5 781 எஞ்சின் பெறவுள்ளது.
இதற்கான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ” என இம் மாதம் 03 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (03.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் கொண்டு செல்லும் சந்தர்ப்பம் என அண்மையில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையின் கடுகண்ணாவ மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இடையே புகையிரதங்களை இயக்க முடிந்தாலும், அதற்கு அப்பால் உள்ள சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அங்கு வேறு புகையிரத எஞ்சின்கள் சேவையில் இல்லை.
பேராதனை புகழ்பெற்ற ‘யக்கா பாலம்’ பகுதியின் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், கண்டியிலிருந்து பேராதனை வரையிலான புகையிரதப் பாதை தற்போதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே, மாற்று வழியின்றி பிரதான நெடுஞ்சாலை வழியாக புகையிரத எஞ்சினைக் கொண்டு செல்ல புகையிரதத் திணைக்களம் தீர்மானித்திருந்தது.
அதற்கமைய இம்மாதம் முதல் வாரத்தில் குறித்த புகையிரத எஞ்சின்களை கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து பேராதனை புகையிரத நிலையத்திற்கு பிரதான பாதையினை பயன்படுத்தி கொண்டு சென்றனர்.
இது இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற சம்பவம் என சமூகவலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பகிரந்திருந்தனர்.
கண்டி புகையிரத நிலையம்
கண்டியில் இருந்து இவ்வாறு பாதை வழியில் புகையிரத எஞ்சின்கள் கொண்டுசென்றமை தொடர்பாக தெரிந்து கொள்ள கண்டி புகையிரத நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்களுக்கு தெரிந்த வகையில் இதுவே முதல் தடவை என தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கண்டி – பேராதனையினை இணைக்கு யக்கா பாலம் 1947 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்படைந்த போது இவ்வாறான முறையில் புகையிரத எஞ்சின் எதுவும் கொண்டு செல்லப்பட்டதா என்று வினவியபோது, குறித்த காலக்கட்டத்தில் இடம்பெற்ற சீரமைப்பு பணிகள் தொடர்பாக அவர்களுக்கு தெரியவில்லை என எமக்கு தெரிவித்தனர்.
பேராதனை புகையிரத நிலையம்
நாம் அதே கேள்வியை கண்டி – பேராதனையினை இணைக்கு யக்கா பாலம் 1947 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்படைந்த போது இவ்வாறான முறையில் புகையிரத எஞ்சின் எதுவும் கொண்டு செல்லப்பட்டதா என்று கேட்டபோதும் அவர்களும் அது குறித்தான தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
யக்கா பாலம் – 1947 வெள்ளப்பெருக்கு பின்
1947 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு, பெரும் சேதத்தை விளைவித்தது. குறித்த பாலத்தில் இருந்து நான்கு பாலங்களும் மகாவலி கங்கையில் சரிந்து விழுந்துள்ள வரலாறு காணக்கிடைத்தது.

அக்காலக்கட்டத்தில் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக தற்காலிக பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாலங்களுக்குக் கீழே இரண்டு தற்காலிகத் தூண்கள் அமைக்கப்பட்டன.

ஏறக்குறைய இரண்டு மாத காலப் பணிகளுக்குப் பிறகு, ரயில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், கடுமையான சுமைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதன்படி, இரட்டை எஞ்சின் கொண்ட ‘பி’ வகை என்ஜின்கள் பாலத்தின் மீது அனுமதிக்கப்படவில்லை, மேலும் ‘காராட்’ வகை என்ஜின்கள் பேராதெனியாவைக் கடந்து கண்டியை நோக்கியும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.Link | Fb link
அக்காலக்கட்டத்தில் புகையிரத எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் பாதை வழியில் கொண்டு செல்லப்பட்டதா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
யாழ்ப்பாண புகையிரத நிலைய சீரமைப்பு பணிகள்
யுத்தம் நிறைவுற்ற பின்னர், யாழ்ப்பாண பிரதேசத்தில் பல முன்னேற்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஒரு விஷேடமான சீர்குலைந்திருந்த கொழும்பு – யாழ்ப்பாண புகையிரத பாதை மீண்டும் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த காலக்கட்டத்தில் நாவற்குளி புகையிரத பால கட்டுமான பணி முடிவடையாததன் காரணமாக யாழ் புகையிரத பாதை பணிகள் துரிதமாக மேற்கொள்வதற்காக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கற்கள் பரவுவதற்காக ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் கனரக வாகனங்கள் மூலம் அக்காலக்கட்டத்தில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அது தொடர்பாக அக்காலக்கட்டத்தில் பேஸ்புக் கணக்குகளில் பகிரப்பட்டிருந்த புகைப்படங்கள் எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
செ.நிரூஜன் என்ற ஊடகத்துறையில் பணியாற்று நபரினால் குறித்த புகைப்படங்கள் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
A9 வீதியில் வழியே யாழ்ப்பாணம் வந்தது புகையிரதம் என தலைப்பிட்டு யாழ்நாதம் என்ற இணைய செய்தி தளத்தில் வீதி வழியாக புகையிரத எஞ்சின் மற்றும் பெட்டிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதை வெளிபடுத்தும் விதமாக அக்காலக்கட்டத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. குறித்த செய்தி தளம் தற்போது செயற்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண புகையிரத நிலையம்
நாம் குறித்த புகையிரத எஞ்சின் மற்றும் பெட்டிகள் கொண்டுவந்தமை தொடர்பாக மேலதிக தகவலினை பெற அவர்களை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்களுக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தலைமை புகையிரத திணைக்களத்தினை தொடர்புக்கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
சுனாமியின் போது
கொழும்பில் இருந்து காலியை நோக்கிச் சென்ற ‘சமுத்திர தேவி’ (Queen of the Sea) என்ற நேரடிப் புகையிரதம் பெரலிய (பரலியா) பகுதியில் சுனாமித் தாக்கத்திற்கு உள்ளானது. Link
ஆயினும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் தொடர்பாக தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை.ஆகவே அங்கு சேதமடைந்த ரயில் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றோம். தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் இதில் புதுப்பிப்பித்து எழுதுகின்றோம்.
கண்காட்சிகளுக்கு புகையிரதம் கொண்டு செல்லல்
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நிகழ்ச்சிக்காக கொழும்பு தெமட்டகொட புகையிரத பட்டறையில் இருந்து அனுராதபுரம் மாவட்டத்தில் ஓயமடுவ என்ற இடத்திற்கு 2012 ஆம் ஆண்டு இரு புகையிரத எஞ்சின்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதனை புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞரை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக நாம் வினவியபோது, கடந்த 2012 ஆம் ஆண்டு ஓயமடுவ தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும், இது கொழும்பில் இருந்து பாதை வழியில் கொண்டு செல்லப்பட்டதையும் அவர் உறுதி செய்தார்.
இலங்கை புகையிரத திணைக்களம்
இலங்கை புகையிரத திணைக்களத்தினை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இதற்கு முன்னர் நாட்டில் இவ்வாறு பாதை வழியில் புகையிரத எஞ்சின்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், குறிப்பாக புத்தல,ஓயமடுவ மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் (Deyata Kirula) கண்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்றமை மட்டுமே நினைவில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாம் சுனாமி மற்றும் 1947 ஆம் ஆண்டு யக்கா பாலம் சேதமடைவு தொடர்பாக வினவியபோது, அது குறித்து தகவல்கள் தேடி பின்னர் அறிவிப்பதாக எமக்கு தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட புகையிரத எஞ்சின் என டித்வாவில் பாதிக்கப்பட்ட புகையிரத பாதையின் சீரமைக்கு பணிகளுக்காக கண்டியில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் முதன்முறை அல்ல எனவும், இதற்கு முன்னர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைக்கும் பணிகளின் போதும் புகையிரத எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

