
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தால் 50 மற்றும் 100 என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படம் இன்று (2025.01.17) பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் YouTube இல் காணொளி ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
தற்போதைய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் பணம் அச்சிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் புதிதாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டிருந்தால் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும்.
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
மேலும் பணம் அச்சிடுவது குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியின் பயன்பாட்டு நாணயக் கொள்கை குழுமத்தினால் எடுக்கப்படுவதால், அத்தகைய தகவல்கள் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதனை நாம் ஆராய்ந்த போது, அவ்வாறு பணம் அச்சிடப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களையும் எம்மால் காணமுடியவில்லை.
இலங்கை மத்திய வங்கி
இவ்வாறான பின்னணியில் நாம் மேற்குறிப்பிட்ட நாணயத்தாள்களின் புகைப்படங்கள் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியிடம் இது தொடர்பில் வினவினோம்.
இதன்போது குறித்த புகைப்படங்கள் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியால் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட புதிய நாணயத்தாள்களை வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட நாணயக் கோப்புறைகளின் (Currency Folders) புகைப்படங்கள் என்றும், இந்தப் கோப்புறைகளில் அதற்கு உரித்தான நாணயத்தாள்கள் இடப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் சமீபத்தில் அவ்வாறான எந்தவொரு கோப்புறைகளும் அச்சிடப்படவில்லை எனவும் இலங்கை மத்தியவங்கியினால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் இலங்கை மத்திய வங்கி 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி “அபிவிருத்தி சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக் கலைஞர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியான நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டதாகவும், 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதிலிருந்து வெளியிடப்பட்ட பதினொன்றாவது தொடர் நாணயத்தாள்கள் இது என்பதுவும் கண்டறியப்பட்டது.
1991 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியால் 10வது தொடர் நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொடர் நாணயத்தாள்கள், அதாவது மேற்குறிப்பிட்ட கோப்புறைகளில் இடப்பட்ட 5000 ரூபா,1000 ரூபா, 500ரூபா, 100ரூபா,50ரூபா, 20ரூபா நாணயத்தாள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இந்த 6 வகையான நாணயத்தாளகள் வெளியிடப்பட்ட போது அதுதொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. Link
பயன்பாட்டில் இருந்த முந்தைய தொடர் நாணயத்தாள்களுக்கும் 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொடர் நாணயத்தாள்களுக்கும் இடையிலான ஒரு பெரிய வேறுபாடு நாணயத்தாள்களின் அளவு ஆகும். புதிய நாணயத்தாள் தொடரின் அனைத்து அளவுகளும் ஒரே அகலத்தைக் கொண்டுள்ளன, அதன் நீளம், மிகச்சிறிய மதிப்பிலிருந்து அதிகபட்ச மதிப்பு வரை, ஒவ்வொன்றும் 5 மி.மீ அளவில் அதிகரித்து காணப்படும்.
இந்தப் புதிய நாணயத்தாள்களில் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட சிங்கம், கலசம் போன்ற சின்னங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக பல்வேறு வகையான பறவைகள் அச்சிடப்பட்டமை குறித்தும் சமூகத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இந்தப் புதிய நாணயத்தாள்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விற்கு “தெயட்ட கிருல கண்காட்சி மைதானத்தில் அறிமுகப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.Link
அதேபோன்று நாணயக்குற்றிகள் மற்றும் நாணயத்தாள்களை சேகரிப்போருக்காக இந்த நாணயத்தாள்கள் அடங்கிய கோப்புறை மற்றும் தனித்தனியான நாணயத்தாள்கள் அடங்கிய உறைகள் என்பவற்றை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியதுடன் அவற்றுக்கான விலை பட்டியல்களும் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் இந்த உத்தியோகபூர்வ நாணயத்தாள்கள் அடங்கிய உறைகளை பெற்ற சிலர், அவற்றை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். Link | Link
இந்த நாணயத்தாள்களை எந்தவித கொடுக்கல் வாங்கல்களின் போதும் பயன்படுத்தலாம் எனவும் மேலும் அவை பயன்பாட்டில் இருக்கும் வரை அது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொறுப்புகூற வேண்டும் என்பதுடன், இலங்கை மத்திய வங்கியால் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட பிற நாணயத்தாள்களும் கொடுக்கல்வாங்கல்களின் போது உபயோகிக்கலாம் எனவும் இலங்கை மத்திய வங்கியால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை பார்வையிட
மேலும் குறித்த நாணயத்தாள்கள் அடங்கிய கோப்புறைகளை கொள்வனவு செய்து பெற்றுக்கொண்ட பின் அது தொடர்பில் தெளிவுப்படுத்தும் காணொளி பினவருமாறு
இதேவேளை அப்போது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் குறித்த புகைப்படங்களில் இருந்த உறைகள் தொடர்பில் வெளியான செய்தி அறிக்கையை காண்க
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயத்தாள்கள் (Current Note Series)
இலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை அச்சிட வேண்டிய சந்தர்ப்பங்கள்
இலங்கை மத்திய வங்கி இரண்டு காரணிகளின் அடிப்படையில் புதிய நாணயத்தாள்களை அச்சிட வேண்டும். இவற்றில் ஒன்று, பயன்பாட்டின்போது சேதமடைந்த நாணயத்தாள்களுக்கு மாற்றாக புதிய நாணயத்தாள்களை அச்சிடுதல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நாணயத்தாள்களை அச்சிடுதல்.
ஒரு நாட்டின் உற்பத்தி அதிகரித்து, பொருளாதாரம் வலுப்பெறும் போது, அந்தப் பொருட்களை வாங்க மக்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்படுகின்றன. இது துல்லியமான மதிப்பீட்டிலும் அறிவியல் அடிப்படையிலும் அச்சிடப்படுதல் வேண்டும்.
Also Read : இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் இதுவா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியடப்பட்ட 11 ஆவது நாணயத்தாள் தொடரிற்காக தனித்தனியாக உருவாக்கப்பட்ட கோப்புறைகளின் (Currency Note Folders) புகைப்படம் என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கை மத்திய வங்கியினால் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை உண்மையா?
Fact Check By: suji shabeedharanResult: False
