சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம்.
அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும்.
அதேபோன்று தற்போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் இனிய திருமண வாழ்த்துக்கள்! என தெரிவித்து பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமானது கடந்த 2025.06.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது உண்மை என எண்ணி பலரும் இந்த புகைப்படத்திற்கு கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில் உண்மையில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்திருப்பார்களாயின் அது தொடர்பில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும்.
எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் கடந்த மார்ச் மாதம் இவர்களின் திருமணம் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் போலியானவை என்ற வித்தில் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. Link | Link
அதில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமண பந்தத்தில் இணையப்போவதாக வெளியாகும் செய்திகள் போலியானவை என்றும் பிரபாஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளை திருமணம் செய்யப்போவதாக பகிரப்படும் தகவல் போலியானது என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தற்போது அவர் தனது எதிர்கால திரைப்படங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரபாஸின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தாக Hindustan Times இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த பதிவில் திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்து ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை நாம் கிளிக் செய்தவுடன் அந்த இணைப்பானது அததெரண செய்தி இணையதளத்திற்குள் உட்செல்வதனை பார்க்க முடிந்தது.
எனவே இவ்வாறான புகைப்படங்களை பகிரிட்டு அதன் மூலம் மக்களை திசைதிருப்பி அவர்களை தங்களின் இணையதளத்தை பார்வையிடச் செய்வதே இவ்வாறான புகைப்படங்கள் பகிரப்படுவதன் நோக்கம் என்பதனை அறியமுடிகின்றது.
எனவே நாம் இது குறித்து அனுஷ்காவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களை ஆய்வு செய்த போது அதிலும் அவர்களின் திருமணம் தொடர்பான எந்த புகைப்படங்களோ அல்லது தகவல்களோ பதிவிடப்பட்டிருக்கவில்லை.
மேலும் இவர்கள் இருவரும் அண்மையில் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படமா இது என்பது தொடர்பில் அறியும் நோக்கில் நாம் பிரபாஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களையும் ஆய்வு செய்தோம்.
இதன்போது அவற்றிலும் அவ்வாறான எந்த தகவல்களோ புகைப்படங்களோ வெளியிடப்பட்டிருக்கவில்லை.
மேலும் இவர்கள் இருவரும் அண்மையில் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பிலும் இதுவரை இந்திய சினிமா துறைசார்ந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகியிருக்கவில்லை.
அத்துடன் குறித்த புகைப்படத்தில் பிராபாஸ் மற்றும் அனுஷ்காவின் முகத் தோற்றங்களில் காணப்பட்ட வேறுபாடுகள் காரணமாக இது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படமா என்பது தொடர்பில் நாம் ஆய்வு செய்தோம்.
இதன்போது இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
தொடர்ந்து நாம் மற்றுமொரு AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தபோது அதிலும் குறித்த புகைப்படமானது செயற்கையான உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பது உறுதியானது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்திய பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து அவர்கள் திருமண கோலத்தில் இருப்பதனை போன்று பகிரப்பட்ட புகைப்படமானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பதுவும் கண்டறிப்பட்டது.
மேலும் அவர்கள் திருமணம் முடித்ததாகவோ திருமண பந்தத்தில் இணையப்போவதாகவோ அவர்களினால் இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது இலங்கையிலுள்ள சில இணையத்தளங்கள் இவ்வாறான போலியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அவர்களின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து அதன் மூலம் தங்களின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொள்வதனை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்.
எவ்வாறாயினும் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அநேகமானவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்!
Fact Check By: suji shabeedharanResult: False
