
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (#9A) பெற்றுச் சித்தியடைந்தள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Jegan Sivanantharasa என்ற பேஸ்புக் கணக்கில் ” #மாவீரர் மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா அவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (#9A) பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.” என்று கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பாக, நாம் குறித்த புகைப்படத்தில் உள்ள பெண் பயிலும் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தின் அதிபர் அவர்களுக்கு தொலைபேசி மூலம் நாம் தொடர்புக்கொண்டு உரையாடிய போது, குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
குறித்த மாணவி 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்றதை தொடர்ந்து குறித்த மாணவியையும் மறைந்த இசைப்பிரியாவையும் தொடர்பு படுத்தி போலியான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த மாணவியின் தாயார் சங்கீத பாட ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிவதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே வசித்தும் வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
குறித்த செய்தி போலியானது என கிளி/விவேகானந்த வித்தியாலயத்தின் பேஸ்புக் கணக்கில் அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து நாம் மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, காலம் சென்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவிற்கு அகல்யா என்ற ஒரு குழந்தையே பிறந்ததாகவும் குறித்த குழந்தையும் ஈழப்போர்ச் சூழலில் நோய் வாய்ப்பட்டு மருத்துவ வசதியின்றி இறந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி தளபதி சிறிராம் என்பவரை இசைப்பிரியா திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wikipedia Link | Archived Link
Eelamalar Link | Archived Link
இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடுதலில் இசைப்பிரியாவின் மகள் என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள சிறுமி சிவாபிரபு இசைப்பிரியாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.
குறித்த மாணவியின் பெயரும் இசைப்பிரியா என்றுள்ளமையினால் மக்கள் மத்தியில் இன்னும் மறையாத நினைவலையாக உள்ள காலம்சென்ற விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவினை தொடர்பு படுத்தி இவ்வாறான வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இசைப்பிரியாவின் மகள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தி என இணையத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டுள்ளது.

Title:இசைப்பிரியாவின் மகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி- உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False