
தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுடன் ஒரே வாகனத்தில் அமர்ந்திருப்பதனைப் போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் என்ன டா இது? என தெரிவித்து கடந்த மே 18 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அதேபோன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சரான விஜய் அவர்களும் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராகபக்ஷவுடன் காரில் இருக்கும் புகைப்படமொன்றும் பகிரப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
இந்திய அரசியலை பொருத்தவரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் பேசுபொருளாக இருந்து வந்தவர். அவ்வாறான சந்தர்ப்பத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உண்மையில் இவ்வாறு அவர்களுடன் இணைந்து காரில் பயணம் செய்திருந்தால் அது குறித்து இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் நிச்சயம் செய்தியாக வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியையும் எம்மால் காணமுடியவில்லை.
ஆகவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் அந்த சந்தர்ப்பத்தில் 2014 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த புகைப்படத்தில் அவர்களுடன் வாகனத்தின் பின் ஆசனத்தில் வேறொருவர் அமர்ந்திருப்பதனையே காணமுடிந்தது.
அந்த பதிவில், காலி முதல் மாத்தறை வரையிலான புதிதாக திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து பயணிப்பதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்.
நான்கு வழிகளைக் கொண்ட இந்த நெடுஞ்சாலைப் பகுதி 18.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புடன், கொட்டாவையிலிருந்து மாத்தறைக்கு பயணிப்பதற்கு ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மாத்திரமே எடுக்கும். என குறிப்பிட்டே அவர் அந்த புகைப்படத்தினை பதிவேற்றியிருந்தார்.
மேலும் குறித்த புகைப்படத்தில் அவர்களின் பின்னால் இருந்த நபரின் இடத்தில் சீமானின் புகைப்படத்தை செயற்கையாக உட்செலுத்தி டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளமையை நன்கு அறியமுடிகின்றது.
இந்த இரண்டு புகைப்படங்களுக்கிடையிலான வேறுபாடுகளை கீழே காண்க

மேலும் இந்த புகைப்படத்தில் சில விடயங்கள் செயற்கையாக காணப்பட்டமையினால் நாம் இந்த புகைப்படத்தினை AI Detective Toolஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்திய போது இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

நாமல் ராஜபக்ஷ
எனினும் நாம் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்புகொண்டு இந்த புகைப்படம் தவறாக சித்திரக்கப்பட்ட ஒன்று என்பதனை எம்மால் அறியமுடிகின்றது என்றாலும் தாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்துள்ளீர்களா என வினவினோம். அதன்போது தான் சீமான் அவர்களை எப்போதும் சந்தித்ததில்லை என்பதனை அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுடன் வாகனத்தில் ஒன்றாக இருப்பதனைப் போன்று பகிரப்படும் புகைப்படம் போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


