
ஜப்பானில் வடக்கு கடலோரப்பகுயில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது.
எனவே அவற்றின் உண்மை தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில்7.5 ரிச்டரில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் கடற்கரைக்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டு அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
#ஜப்பானில்சுனாமி தற்போதைய நிலைமையும் நாம் அறிய வேண்டிய உண்மைகளும்
நேற்று வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமி அலைகள் குறித்த செய்திகள் நம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளன. சர்வதேச ரீதியில் நடக்கும் இத்தகைய இயற்கை பேரிடர்கள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்
ஜப்பானின் சன்ரிகு கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
ஆமோரி மற்றும் இவாட் மாகாணங்களில் உள்ள சில தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. குறிப்பாக குஜி (Kuji) துறைமுகப் பகுதியில் சுமார் 80 செ.மீ உயரத்திற்கு அலைகள் ஊடுருவின.
ஜப்பான் அரசு ஏற்கனவே அமைத்திருந்த பிரம்மாண்டமான கடல் தடுப்புச் சுவர்கள் (Sea Walls), இம்முறை பெரும் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துள்ளன.
சில இடங்களில் சாலைகளில் நீர் புகுந்ததோடு, சிறிய மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் இதுவரை பதிவாகவில்லை
ஜப்பானிய அரசு தற்போது ஒரு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட 1% வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானில் வசிக்கும் நமது உறவுகள் மற்றும் அங்குள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.

மேலும் News18 Tamilnadu Youtube பக்கத்திலும் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim – 1
ஜப்பானில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கையிடல்களை நாம் ஆராய்ந்த போது மேற்குறிப்பிட்ட காணொளிகள் அந்த செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை.
அதனடிப்படியில் முதலாவது காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வின மேற்கொண்ட போது MBS NEWS என்ற youtube பக்கத்தில் குறித்த காணொளியானது 2024 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதில் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ஜப்பான் மொழியில் இருந்தமையினால் நாம் அதனை மொழிபெயர்ப்பு செய்து பார்க்கும் போது [நிலநடுக்கத்தின் தருணம்] வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுகின்றன… மின்கம்பிகள் கடுமையாக அதிர்கின்றன, மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர் – நோட்டோ தீபகற்ப நிலநடுக்கத்தின் போது இஷிகாவா மாகாணத்தின் அனமிசு நகரத்தில் காணப்பட்ட காட்சிகள் [டேஷ்கெம் காணொளி] என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் நாம் அந்த காணொளி தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்த போது ஜப்பானிய பெண் ஒருவரின் எக்ஸ் தள கணக்கிலும் இந்த காணொளி 2024 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அந்த பெண் “நோட்டோ தீபகற்ப நிலநடுக்கம் ஏற்பட்டபோது,
நானும் என் கணவரும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் மூன்று பிள்ளைகளும் அவர்களின் தாத்தா பாட்டியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
நாங்கள் உடனடியாக வீட்டிற்குத் திரும்பினோம், மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், அனைவரையும் காரில் ஏற்றி உயரமான இடத்திற்கு வெளியேறினோம்.
நான் உண்மையிலேயே இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன்.” என தெரிவித்தே காணொளியை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Claim – 2 , Claim – 3
இரண்டாவது காணொளி தொடர்பில் நாம் அவதானத்தை செலுத்திய போது அந்த காணொளியானது 2011 ஆம் ஆண்டு ஜப்பானை சுனாமி தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
மேற்குறிப்பிட்ட காணொளி 2015 ஆம் ஆண்டு Youtube தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் காணொளியின் விளக்கக் குறிப்பில் இந்த காணொளியானது 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் மியாகி மாகாணத்தில் உள்ள கெசென்னுமா நகரை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காட்சியாகும். என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது, Travel with Shrawan என்ற பேஸ்புக் பக்கத்தில் மார்ச் 11, 2011 — ஜப்பான் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு நாள்.
கடல் பொங்கியது, நகரங்கள் மறைந்தன, ஆனால் ஜப்பானின் மன உறுதி ஒருபோதும் அழியவில்லை. என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று ஜப்பானில் நேற்று (20) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி என குறிப்பிட்டு 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளியிலுள்ள ஒரு காட்சியின் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளனர் என்பதனையும் தெளிவாக அறியமுடிகின்றது.
ஆகவே பழைய காணொளியின் காட்சியின் புகைப்படத்தையே நேற்றை நிலநடுக்கத்தின் புகைப்படம் என்று பகிர்ந்துள்ளனர் என்பதனை விளக்க மேற்குறிப்பிட்ட காணொளியில் உள்ள சில தகவல்களை நாம் அடையாளப்படுத்தி காண்பித்துள்ளோம்.
| ஜப்பானின் தற்போதை நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படம் | 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்ட காணொளியின் காட்சி |
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை
2026, ஏப்ரல் 20 திங்கட்கிழமை அன்று ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் (சான்ரிகு கடற்கரைக்கு அப்பால்) 7.7 ரிக்டர் அளவிலான (அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி 7.4) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ முதல் 19 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வார காலத்திற்குள் 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவில் “பாரிய நிலநடுக்கம்” (Megaquake) ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண காலங்களை விட சற்று அதிகமாக” இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சாதாரண நேரங்களில் இத்தகைய பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.1% ஆக இருக்கும் நிலையில், தற்போது அது 1% ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு மாத்திரமே தவிர, நிலநடுக்கம் வரும் என்பதற்கான கணிப்பு அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டு, சுமார் 1,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டது. இவாட் மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் அதிகபட்சமாக 80 செ.மீ உயர அலைகள் பதிவாகின. தற்போது அனைத்து சுனாமி எச்சரிக்கைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ அல்லது கட்டிடச் சிதைவுகளோ இதுவரை பதிவாகவில்லை. ஆமோரி மற்றும் இவாட் மாகாணங்களில் சிலர் கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானிய பிரதமர் சனாயே தகாயிச்சி (Sanae Takaichi), கடற்கரையோரம் உள்ள 182 நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடரும் அதே வேளையில், அவசர கால தங்குமிடங்கள் மற்றும் வெளியேற்ற வழிகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவசர கால உணவு மற்றும் உடைமைகள் அடங்கிய பைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 2011ஆம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் “நெருப்பு வளையம்” (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.Link | Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜப்பானில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டவை தவறானவை என்பதுடன் அவை ஜப்பானில் 2011 மற்றும் 2024 காலப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


