
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களின் படிப்பு பட்டம் முடிக்காமல் இத்தோடு முடிந்துபோக வேண்டும் இனி வருங்காலங்களில் எவனும் எந்த சேட்டையும் பண்ண நினைக்கவே கூடாது என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.05.05) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததுடன் இந்த புகைப்படம் தொடர்பில் உண்மை அறியாத பலரும் இந்த பதிவில் கமென்ட் செய்திருந்ததனையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் இது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம். இதன்போது, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கடந்த 2025.05.04 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 04 மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை நேற்று (2025.05.05) ஆஜர்ப்படுத்திய போதே அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. Link| Link| Link
எனினும் மேற்குறிப்பிட்ட செய்திகளில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மாணவர்களை தவிர்த்து மேலும் சில மாணவர்கள் நேற்று (2025.05.05) சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக Hiru News தமிழ் இணையத்தளத்தில் வெளியான செய்தியில் குறித்த மாணவர்களை பொலிஸார் அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது, எனினும் அந்த புகைப்படத்தில் குறித்த மாணவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டே செல்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
எனவே இந்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்புக்கொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடந்த 2025.05.04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவரக்ளை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களை எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பிலும் நாம் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியிருந்தோம், இதன்போது, குறித்த புகைப்படமானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் உண்மையில் கடந்த 04 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 04 பேரும் ஆண்கள் எனவும் இந்த புகைப்படத்தில் இரு பெண்களுடன் சேர்த்து 5 பேர் இருக்கின்றனர். ஆனால் குற்றப்புலானாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட நால்வரில் பெண்கள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அது மட்டுமன்றி இந்த நால்வரை தவிர்த்து நேற்றைய தினம் (2025.05.05) மேலும் 4 பேர் பொலிஸில் சரணடைந்ததுடன் இன்றைய தினம் (2025.05.06) மேலும் இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பத்தில் இதுவரை மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
எனவே கடந்த 04 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 பேரும் ஆண்கள் என்பதுடன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் பெண்களும் காணப்பட்டனர். அத்துடன் இந்த புகைப்படமானது செயற்கையாக காணப்பட்டமையினால் நாம் இந்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை கைதானவர்கள்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதற்கு பகிடிவதையே காரணமென தெரிவித்து, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்த மாணவரின் தற்கொலைக்குக் காரணம் பகிடிவதையா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
பகிடிவதை என்பது குற்றவியல் குற்றம் என்பதால், யாரேனும் பகிடிவதையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில், எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அது மட்டுமன்றி இந்த நால்வரை தவிர்த்து நேற்றைய தினம் (2025.05.05) மேலும் 4 பேர் பொலிஸில் சரணடைந்ததுடன் இன்றைய தினம் (2025.05.06) மேலும் இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை எனினும் அது தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது கண்டறிப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?
Fact Check By: suji shabeedharanResult: Missing Context
