
இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு அந்த புகைப்படங்கள் நேற்று (2026.04.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மத்திய கிழக்கு போர் நிலைமைகள் தொடர்பான செய்திகளை பிரதான சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளவாறு கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் எச்சங்கள் உண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் சர்வதேச பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கு எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
எனினும் நாம் இந்த புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் 2025 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதியன்று ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டிருந்தமையை காணமுடிந்தது.
அந்த செய்தியில், காசா பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் என பகிரப்பட்ட இந்த புகைப்படம் தவறானது எனவும் மாறாக இந்த புகைப்படம் பொலிவியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட இரண்டு ஸ்பானியக் குழந்தைகளையே சித்தரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று பாலஸ்தீன காஷெஃப் உண்மை சரிபார்ப்பு அமைப்பும் இந்த புகைப்படம் பொலிவியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட இரண்டு ஸ்பானியக் குழந்தைகளுடையது என்பதனை 2025 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது.
அதனடிப்படையில் இந்த புகைப்படமானது காசா போரின் போது எடுக்கப்பட்டது என தெரிவித்து 2025 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் தவறாக பகிரப்பட்டு வருகின்றமையை அறியமுடிகின்றது.
இந்த புகைப்படம் குறித்து தொடர்ந்து நாம் தேடுதலில் ஈடுபட்ட போது, Tanya Knight என்பவரின் Flickr கணக்கில் 2006 ஆம் ஆண்டு இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

அந்த பதிவில் அருங்காட்சியகங்களில் நாம் காணும் விடயங்கள் எப்போதுமே ஆச்சரியமளிப்பவையாக இருக்கும். பொலிவியாவின் பொட்டோசி நகரில் உள்ள Mint அருங்காட்சியகத்தில், 1800-களில் வாழ்ந்த, பதப்படுத்தப்பட்ட இரண்டு ஸ்பானியக் குழந்தைகளை நான் கண்டேன். அது மிகவும் கொடூரமான விடயம் என குறிப்பிட்டு அவர் பகிர்ந்திருந்தார்.
மேலும் Archaeo Histories என்ற x கணக்கில் 2025 ஆம் ஆண்டு, குறித்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் எச்சங்கள் தொடர்பில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த குழந்தைகளின் எச்சங்கள் தொடர்பான புகைப்படங்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்பட்டு வந்துள்ளது ஆனால் காசா போர், மற்றும் தற்போதை உலகளாவிய பதற்றத்தை ஏற்படுத்தயுள்ள மத்திய கிழக்கு போர் நிலைமைகள் அந்த காலக்கட்டங்களுக்கு பிறகு வலுப்பெற்ற போராகும். ஆகவே இந்த புகைப்படங்கள் போர் நிலைமைகளை மையமாக வைத்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பகிரப்பட்டவை என்பது தெளிவாகின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படம் தவறானது என்பதுடன் அது பொலிவியாவின் பொட்டோசி நகரில் உள்ள மின்ட் அருங்காட்சியகத்தில், பதப்படுத்தப்பட்ட 1800-களில் வாழ்ந்த, இரண்டு ஸ்பானியக் குழந்தைகளின் எச்சங்களின் புகைப்படம் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


